ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரின் பெயரில் இருப்பதாலேயே ஒருவரை போட்டியிடக் கூடாது என சொல்ல முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் முக்கிய கட்சி வேட்பாளர் பெயரிலேயே மற்ற சிலரும் போட்டியிடுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒருவர் ராகுல் காந்தி அல்லது லாலு பிரசாத் யாதவ் பெயரில் பிறந்திருக்கிறார் என்பதற்காகவே, அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து எப்படி தடுத்து நிறுத்த முடியும்? இது ஒருவரின் உரிமையை பறிப்பதாகாதா? ஒருவேளை, ஒரு பெற்றோர், மிகப்பெரிய அரசியல் தலைவரின் பெயரை தங்களது பிள்ளைகளுக்கு சூட்டியிருந்தால், அது அவர்களின் தேர்தலில் போட்டியிடும் உரிமைக்கு குறுக்கே வருமா? என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.கே. பிஜுவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
மேலும், உங்களுக்கு இந்த மனுவின் நிலை என்ன என்பது தெரிந்திருக்கும் என்று கூறிய நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள வழக்குரைஞருக்கு அனுமதியளித்தனர்.
இந்த மனுவில், வாக்காளர்களைக் குழப்புவதற்காகவே, அரசியல் கட்சித் தலைவர் பெயரில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டு, வாக்காளர்களை குழப்பிவிடுவதால், வாக்குகள் சிதறுகின்றன. ஒவ்வொரு வாக்கும், ஒரு வேட்பாளரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திவாய்ந்தவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.