இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!
ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து...
இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டன் நாட்டின் குடியுரிமைப் பெற்றவர் எனக் குற்றஞ்சாட்டி கடந்த 2025 டிசம்பரில் மாதம் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி எஸ். விக்னேஷ் ஷிஷிர் என்பவர் ரேபரேலியில் உள்ள நாடாளுமன்ற/சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS), அலுவல் ரகசியச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டுச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையின் பேரில், நீதிமன்றம் அந்த வழக்கை லக்னௌவிற்கு மாற்றியது. ஆனால், குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் தீர்ப்பளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனக் கூறி லக்னௌ சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, மனுதாரர் அலாகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில், அந்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னௌ அமர்வின் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை மாநில அரசு கோரலாம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.