ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து
ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டத்தால் 70 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை என்றும், நிர்வாகம் தவறாக நிர்வகிக்கப்படுவதாகவும் கடந்த மாதம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சங்கத்தினர் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு முதல் விமான நிறுவன ஊழியர்கள் பலர் திடீரென்று உடல்நலம் குறைவாக இருப்பதாக கூறி ‘நோய் விடுப்பு’ எடுத்து பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதன் எதிரொலியாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பல தாமதமாக புறப்பட்டது, 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, தில்லி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய விமான நிறுவன செய்தித் தொடர்பாளர்,
“நேற்றிரவு முதல் ஊழியர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளதால் கடைசி நேரத்தில் சேவை ரத்து செய்யப்படும் சூழல் எழுந்துள்ளது. எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். சேவை ரத்து செய்யப்பட்டுள்ள பயணிகளின் முழுப் பணத்தையும் திருப்பி தரப்படும் அல்லது வேறு நாளில் சேவை மாற்றியமைத்துக் கொள்ளலாம். எங்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு உறுதி செய்து கொள்ள வலியுறுத்திகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழியர்களின் விடுப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.