மூன்றாம் பாலினத்தவருக்குக் கழிப்பறை: உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்!
தில்லி அரசு உயர்நீதிமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவர் வசதிக்காக பதில்
மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்புக் கழிப்பறை கட்டித் தர கோரிய வழக்கு, தில்லி அரசின் பதிலுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தால் திங்கள்கிழமை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜாஸ்மின் கவுர் சாப்ரா என்பவர் தொடர்ந்த இந்தப் பொதுநல வழக்கில் தில்லி அரசு மற்றும் புது தில்லி நகராட்சி வாக்குமூலம் அளித்ததுடன் திட்ட அறிக்கையையும் தாக்கல் செய்தது.
மூன்றாம் பாலினத்தவரின் பயன்பாட்டுக்காக 143 சிறப்பு கழிப்பறைகள் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக 223 கழிப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் தில்லி அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், 30 கழிப்பறைகள் கட்டும் திட்டமும் உள்ளதாகவும் மாற்று திறனாளிகளுக்கான 1,584 கழிப்பறைகள் மூன்றாம் பாலினத்தவர்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இதனையடுத்து தாக்கல் செய்த அறிக்கைகளின்படி நடந்துகொள்ளுமாறு எதிர்தரப்பைக் கேட்டுள்ள, நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிஎஸ் அரோரா தலைமையிலான அமர்வு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளது.