கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிட பரிசீலனை
புது தில்லி: நிகர கடன் திரட்ட மத்திய அரசு வரம்பு விதித்ததற்கு எதிராக கேரள அரசு தொடுத்த வழக்கை அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அந்த மாநிலத்திடம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி அளித்தது.
இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், ‘கேரளத்தின் நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்ய மாநில அரசுக்கு சுமாா் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்நிலையில், கேரள அரசு நிகர கடன் திரட்ட மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது. இது பொதுச் சந்தையில் கடன் திரட்டுவது உள்பட அனைத்து வழிகளிலும் கடன் திரட்டுவதைக் கட்டுப்படுத்துகிறது.
அத்துடன் இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தனது நிதி விவகாரங்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் உள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 293-ஆவது பிரிவு மாநிலங்கள் கடன் வாங்கும் விவகாரத்தை கையாள்கிறது. இந்தப் பிரிவு உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூா்வ விளக்கத்துக்கு இதுவரை உள்படுத்தப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்தோ அல்லது பிற வழிகளில் இருந்தோ கடன் திரட்ட மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 293-ஆவது பிரிவு உரிமை அளித்துள்ளதா என்பன உள்ளிட்ட விவகாரங்களை அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறி, வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது.
இந்த விவகாரம் அவசரமானது என்றும், இதனால் மனுவை கோடை விடுமுறைக்குப் பின்னா் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக கேரள அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை முறையிட்டாா்.
இதையடுத்து, அந்த மனுவை அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் உறுதி அளித்தனா்.