முகப்பு
இந்தியா

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

Updated On : 15 மே, 2024 at 2:20 AM
வாரணாசி மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி ராஜலிங்கத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்த பிரதமர் மோடி.
பகிர்:

கடையநல்லூர்: வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை வேட்புமனுவைப் பெற்ற தேர்தல் அதிகாரி தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி.

வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவை வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.

2006-இல் முதல் முறையாக குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற ராஜலிங்கம், உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். 2009}ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.

குஷிநகர் ஆட்சியராக ராஜலிங்கம் பணியாற்றியபோது, அந்த மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விரைவாக நிறைவேற்றியதைப் பாராட்டும் வகையில், சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, ராஜலிங்கத்தின் தோளில் தட்டிப் பாராட்டினார்.

2022-ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் நியமிக்கப்பட்டார்.

உத்தர பிரதேசத்தின் சுகாதார தரவரிசை மாவட்டங்கள் பட்டியலில் வாரணாசியை முதல் இடத்திற்கு கொண்டு வந்தவர் என்ற பெருமை பெற்றவர்.

சுல்தான்பூர் ஆட்சியராக ராஜலிங்கம் இருந்தபோது நடைபாதைகளில் 50 ஆண்டுகளாக எந்த அடையாளமும் இன்றி வாழ்ந்த குடும்பங்களுக்கு அவர் செய்த உதவி குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.