பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என பள்ளி வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அம்ரா பகுதியில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஹரேந்திர ராஜாக். இவர் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பேசியுள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி மக்கள் சாப்பிடும் வகையில் கூட இல்லை என்பதைக் குறிப்பிட்டு மாணவர்களிடம் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெற்றோருடன் கலந்துரையாடும்போது ஆசிரியர் கூறியதை குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய முசாபர்பூர் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததைத் தொடர்ந்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு அரசு அதிகாரியும் தங்கள் பணியிடத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசி தேர்தல் முடிவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் அவ்வாறு கூறினாரா? என்பதை வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடம் உறுதிப்படுத்திய பிறகே வழக்குப்பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.