தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கணித்துள்ளார்.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. பிற்பகல் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 52.02 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 27.78 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊரான தாணேவில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது பேசிய அவர், 2024 இல் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
தனது போட்டியாளரான உத்தவ் தாக்கரே மொத்தமாகத் தோல்வியைத் தழுவுவார். மகாராஷ்டிர மக்களுக்கு ஒரு முறை அல்ல, இரண்டு முறை துரோகம் செய்து முதல்வராக அவர் பதவியேற்றுள்ளார். சித்தாந்தங்களை சமரசம் செய்து, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக துரோகிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.