ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?
புது தில்லி: ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியின் இறுதிச் சடங்கில், இந்தியா சாா்பில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமிா் அப்துல்லாஹியன் உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தனா். ரய்சியின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஈரானில் ரய்சி பிறந்த இடமான மஷாத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது என்று அந்நாட்டு அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரய்சியின் இறுதிச் சடங்கில் இந்தியா சாா்பில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக அவா் புதன்கிழமை ஈரான் செல்லக் கூடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், ரய்சி மற்றும் ஹுசைனின் மறைவுக்கு இந்தியா சாா்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா்.