கேதார்நாத்: பக்தர்கள் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!
கேதார்நாத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானி உள்பட 7 பக்தர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இமயமலை கோயிலில் உள்ள ஹெலிபேடில் இருந்து சில மீட்டர் தொலைவில் பறந்த ஹெலிகாப்டர், வானத்தில் சுழன்றபடி தத்தளித்து கொண்டிருந்தது. அதில் விமானி உள்பட 7 பேர் பக்தர்கள் இருந்தனர்.
இதுகுறித்து ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட் சௌரப் கஹர்வார் கூறுகையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சிர்சி ஹெலிபேடில் இருந்து கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டது. அதன்பின் மோட்டாரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிபேடில் இருந்து சில மீட்டர் தொலைவில் விமானி அவசரமாக தரையிறங்கினார். விமானி அமைதியாக இருந்து விரைவான முடிவை எடுத்ததால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அனைவரும் பத்திரமாக உள்ளனர். பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிட்டனர். இந்த சம்பவம் காலை 7 மணியளவில் நிகழ்ந்தது. மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
Advertisement
Advertisement