12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்த அத்திவரதர்! நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதரை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பிரம்மன் கோவில் தெருவில், சௌராஷ்டிர தர்ம பரிபாலன கமிட்டி நிர்வாகத்தால், கடந்த 1739 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில், அத்திமரத்தினால் உருவாக்கப்பட்ட, அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
Advertisement
Advertisement
கடந்த 1915 ஆம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு, அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்புரியவுள்ளார்.
அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர், பாதாள அறையில் இருந்து எடுத்து வரப்பட்டு, தைலகாப்பு அலங்காரம் செய்து, சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டது.
விழா நாள்களில் தைலகாப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடக்கிறது. தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சாமி தாிசனம் செய்ய உகந்த நேரம் என சௌராஷ்டிர தர்மபரிபாலன கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, 48 நாள்களுக்கு பக்தர்களுக்கு சயன மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.