மிஸோரம்: பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மிஸோரத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.
மிஸோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்துள்ள நிலையில், வானிலை காரணமாகவும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கனமழையால் ஐஸால் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். இதுதவிர பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் ரீமெல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய வங்கக்கடலில் உருவான் ரீமெல் புயல் வங்கதேசத்தின் கோப்புப் பாரா-மேற்கு வங்கத்தின் சாகர்தீவுக்கு இடையே கடந்த ஞாயிறன்று நள்ளிரவு கரையைக்கடந்தது. இதன் தாக்கத்தால் மிஸோரம் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. ஐஸால் மாவட்டத்தில் மெல்தும் மற்றும் லிமென் பகுதிகளுக்கு இடையில் உள்ள கல்குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
Advertisement
கல்குவாரியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஐஸால் பகுதியில் இன்று காலை முதல் மழை சற்று ஓய்ந்த நிலையில், மீண்டும் மீட்புப் பணிகள் தொடர்ந்துள்ளது.
ஐஸால் மாவட்டத்தில் உள்ள சாவன்புரி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹன்தாரில் தேசிய நெடுஞ்சாலை 6 மற்றும் பங்பங்களாவில் நெடுஞ்சாலை 54ல் நிலச்சரிவு ஏற்பட்டதால் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலை நேற்று நாள்முழுவதும் துண்டிக்கப்பட்டது.
குவஹாத்தியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி, இன்று(மே29) மிஸோரமில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் 30-40 கிமீ வேகத்தில் வேகமான காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள துறைகளைத் தவிர, இன்று(மே 29) அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.