காங்கிரஸ் பெயரை 232 முறை, தனது பெயரை 758 முறை சொன்ன மோடி!
மத்திய அரசுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி முழுப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஏஐசிசி தலைமையகத்தில் செய்தியாளர்களுடன் கார்கே பேசினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் 421 முறை கோயில்-மசூதி பிரிவினை பற்றிப் பேசியுள்ளார். மேலும் கடந்த 15 நாள்களில் மட்டும் காங்கிரஸ் பெயரை 232 முறையும், மோடி தனது பெயரை 758 முறையும் பயன்படுத்தியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது ஜாதி மற்றும் மதத்தின் மீது வாக்குகளைக் கோரக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை அவர் மீறியுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அவர் ஒருமுறை கூட பேசவில்லை. ஜூன் 4-ம் தேதி மாற்று அரசை அமைப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
ரிச்சர்ட் அட்டன்பர்க் இயக்கிய படத்திற்குப் பிறகுதான் மகாத்மா காந்தியைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு வந்ததாக மோடி கூறினார்.
மகாத்மா காந்தி உலகம் முழுவதும் அறியப்பட்டவர். "காந்தி" படத்தைப் பார்த்த பிறகு மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிந்துகொண்டதாக நரேந்திர மோடி கூறினார். இது சிரிப்பாக இருக்கிறது, ஒருவேளை மோடி காந்திஜியைப் பற்றிப் படிக்காமல் இருந்திருக்கலாம். ஐ.நா. உள்பட உலகின் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மகாத்மா காந்தியைப் பற்றி நரேந்திர மோடிக்கு தெரியாவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றியும் அதிகம் அறிந்திருக்க மாட்டார். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் படித்துத் தெரிந்துகொள்ள மோடிக்கு நிறைய ஓய்வு கிடைக்கும் என்று கார்கே கூறினார்.