பயத்தை உருவாக்கி மக்களைத் திசைதிருப்புகிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி!
அசாமில் பிரதமர் மோடி காங்கிரஸ் மீது கடும் விமர்சனம்..
உலகளாவிய மோதல்களால் மக்களிடையே பதற்றத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பயத்தை உருவாக்கி வருவதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாக, நேற்று குவாஹாட்டியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த நிலையில், இன்று சில்சாருக்கு வருகை தந்துள்ள அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு சில்சாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்,
காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களைப் புறக்கணித்து வருகின்றது. சுதந்திரத்தின்போது வரையப்பட்ட எல்லைக்கோடு, பராக் பள்ளத்தாக்கிற்குக் கடலுக்கான அணுகலைத் துண்டிக்கும் வகையில் அமையக் காங்கிரஸ் அனுமதித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
உலகம் போர்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டிலுள்ள மக்கள் மீது ஏற்படும் போர்ப் பதற்றத்தைக் குறைக்க மத்திய அரசு முயன்று வருகின்றது. காங்கிரஸ் பொறுப்புள்ள அரசியல் கட்சியாகச் செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால், அவ்வாறு செயல்படுவதில் தவறிவிட்டது. மக்களிடையே பயத்தை உருவாக்க முயல்கிறது.
அசாம் குறித்தோ அல்லது நாட்டை குறித்தோ அவர்களுக்கு எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, மாறாக மோடியை இழிவாகப் பேசுவதிலும், மக்களைத் திசைதிருப்பும் வகையில் வதந்திகளை, பொய்களை பரப்புவதிலும் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது.
பராக் பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் வர்த்தகம் மற்றும் வணிகத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது. வடகிழக்கு மாநிலங்களைக் காங்கிரஸ் கட்சி அவற்றின் போக்கிலேயே விட்டுவிட்டது போலவே, பராக் பள்ளத்தாக்கைப் பலவீனப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியது.
ஒரு காலத்தில் தொழில்துறை மையமாக அறியப்பட்ட பராக் பள்ளத்தாக்கு, அதன் அடிப்படை பலத்தையே இழந்து நின்றது. சுதந்திரத்திற்குப் பிந்தைய பல பத்தாண்டுகளாகக் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், இப்பகுதி வளர்ச்சியில் பிண்ணடைந்தே காணப்பட்டது. இன்று, அந்த நிலையை மாற்றியமைக்க பாஜக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மாநில இளைஞர்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நோக்கி காங்கிரஸ் திசைதிருப்பியதாகப் பிரதமர் குற்றம் சாட்டினார். அதே வேளையில், அம்மாநில இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதை பாஜக உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் எங்குச் சிந்திப்பதை நிறுத்திக்கொள்கிறதோ, அங்கிருந்து நாங்கள் செயல்படத் தொடங்குகிறோம். வளர்ச்சியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜகவின் தாரக மந்திரம் என்று அவர் குறிப்பிட்டார்.