நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!
அஸ்ஸாமின் பர்பேட்டா மாவட்டத்தில் பிரதமர் மோடி உரை..
காங்கிரஸ் தொடர்ந்து பாகிஸ்தானின் தாளத்திற்கு ஆடுகிறது; நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்கிறது: அசாமில் பிரதமர்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தனது அரசு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியோ அண்டைய நாட்டின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மாநிலத்தில் ஏப்ரல் 9 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
அஸ்ஸாமின் பர்பேட்டா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்தவரை, காங்கிரஸ் எப்போதும் குறுகிய கண்ணோட்டத்துடனேயே அணுகி வந்ததாகவும், ஆனால், பாஜகவோ நாட்டின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கிப் பணியாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி எப்போதும் பாகிஸ்தானின் தாளத்திற்கு ஆடி வருகின்றது. பாகிஸ்தானுடனான இந்தத் தொடர்பு நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்கிறது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த மறுப்பதன் மூலம் காங்கிரஸ் ராணுவத்தைப் புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால், நாட்டைப் பாதுகாப்பவர்களுக்கு நீதி கிடைப்பதை பாஜக உறுதி செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட பல்வேறு அமைதி ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் பாஜக மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளும், பல்வேறு தியாகங்களும் அஸ்ஸாமில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாநிலத்தில் நிலவும் அமைதியும் ஸ்திரத்தன்மையும், பாஜக ஆட்சியின் கீழ் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இது தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்ய, காங்கிரஸை (அதிகாரத்திலிருந்து) வெளியேற்றுவது அவசியமாகும்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம், 2029 ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய, அஸ்ஸாம் மாநிலப் பெண்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் வலியுறுத்த வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மாநிலத்தில் உள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெறுகிறது.