வாக்கு வங்கிக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கையை திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கையை திரிணமூல் காங்கிரஸ் அரசு பின்பற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹால்டியாவில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல. மேற்கு வங்கத்தின் பிரமாண்ட வளர்ச்சியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல். தேர்தலின் முதல் மற்றும் முக்கிய நடவடிக்கை, இரக்கமற்ற அரசை வீட்டுக்கு அனுப்புவதாகும்.
இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், நாட்டின் பல மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதே. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசு மட்டும் மாநிலத்தைக் கீழ்நோக்கித் தள்ளுகிறது. ஒரு காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாக இருந்த மேற்கு வங்கம், தற்போது அனைத்து வளர்ச்சிகளிலும் ஆளுங்கட்சியால் கீழே தள்ளப்பட்டுள்ளது.
Advertisement
திரிணமூல் காங்கிரஸ், தனது வாக்கு வங்கியைக் காப்பாற்றுவதற்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுகிறது.
பிரதமரை எதிர்ப்பதால் மட்டும் மாநிலம் முன்னேறாது. பிரதமரும் முதல்வரும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான், லாபமடைய முடியும்.
மேங்கு வங்க இளைஞர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் இரு மடங்கு துரோகமிழைத்துள்ளது. இளைஞர்களுக்கு எதிராக அவர்கள் செய்த பாவங்களிலிருந்து விடுபட 100 ஆண்டுகளானாலும் முடியாது.
தனியார் துறையை மாநிலத்திலிருந்து ஆளுங்கட்சி வெளியேற்றி விட்டது. தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் இல்லை. வாய்ப்புகள் இருக்குமிடங்களிலும்கூட ஊடுருவல்காரர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அரசு வேலைகளை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கொள்ளையடிக்கின்றனர்.
அவர்கள் ஊடுருவல்காரர்களையும் குண்டர்களை மட்டுமே வளர்த்துள்ளனர். அச்சத்தைப் பரப்புவது மட்டுமே அவர்களுக்கு தெரியும்" என்று தெரிவித்தார்.