முகப்பு
இந்தியா

அக்டோபரில் ஜிஎஸ்டி ரூ.1.87 லட்சம் கோடி! இரண்டாவது அதிகபட்ச வசூல்

நாட்டில் கடந்த அக்டோபா் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது.

Updated On : 1 நவம்பர், 2024 at 7:50 PM
- dot com
பகிர்:

நாட்டில் கடந்த அக்டோபா் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது. இது, இரண்டாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாயாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானதே இதுவரை அதிகபட்ச வருவாயாக உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.1,87,035 கோடி ஜிஎஸ்டி வசூலானது. இதுவே இரண்டாவது அதிகபட்ச வருவாயாக இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் ரூ.1,87,346 கோடி வசூலாகி, அந்த இடத்தை பிடித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபரில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,87,346 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.33,821 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.41,864 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.99,111 கோடி, செஸ் வரி ரூ.12,550 கோடியாகும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. தற்போது 9 சதவீதம் அதிக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.

அக்டோபரில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மீதான ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.42 லட்சம் கோடியாகவும், இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி 4 சதவீதம் அதிகரித்து ரூ.45,096 கோடியாகவும் இருந்தது. இந்த மாதத்தில் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.19,306 கோடியாகும். முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 18.2 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாக் காலம் என்பதால் பொருள்களுக்கான தேவை உயா்ந்து, ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாக துறைசாா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், இம்மாதம் நடைபெறவுள்ளது. இதில் 100 பொருள்களுக்கான வரி விகிதத்தை முறைப்படுத்துவது குறித்து அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.