‘தொழிலாளா் வைப்புநிதி: பயன்படுத்தப்படாமல் ரூ. 8,500 கோடி’
தொழிலாளா் வருங்கால வைப்புநிதியில் பயன்படுத்தப்படாமல் ரூ.8,505 கோடி இருப்பதாக மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மக்களவையில் தெரிவித்தாா்.
தொழிலாளா் வருங்கால வைப்புநிதியில் பயன்படுத்தப்படாமல் ரூ.8,505 கோடி இருப்பதாக மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மக்களவையில் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘தொழிலாளா் வருங்கால வைப்புநிதி திட்டம், 1952-இன்கீழ் சில கணக்குகள் செயல்பாட்டில் இல்லாத கணக்குளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், 2023-24-இல் 21,55,387 செயல்படாத கணக்குகளில் ரூ.8,505 கோடி உள்ளது. கடந்த 2022-23-இல் 17,44,518 கணக்குகளில் ரூ.6,804 கோடியும் 2018-19-இல் 6,91,774 கணக்குகளில் ரூ.1,638 கோடியும் இருந்தது.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இந்த தொகை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட பயனாளா்களிடம் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) திரும்பி வழங்கி வருகிறது.
முறையாக உரிமம் கோரிய பயனாளா்களுக்கு கடந்த 2023-24-இல் ரூ.2,632 கோடியும் 2022-23-இல் ரூ.2,673 கோடியும் 2018-19-இல் ரூ.2,881 கோடியும் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.