அரசியலமைப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி படிக்காதது ஏன்? ராகுல்!
பிரதமர் மோடி இந்த புத்தகத்தை படித்திருந்தால்..
பிரதமர் மோடி அரசியலமைப்பைப் படிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பு நாளை இன்று கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட 75-வது ஆண்டு ஆகும். இந்த விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார். அதன்பிறகு அரலசியமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சம்விதன் ரக்ஷக் அபியான் நிகழ்ச்சியில் ராகுல் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு நாளில் நடைபெற்ற விழாவைக் குறிப்பிட்டு, மோடி அரசியலமைப்பைப் படிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி இந்த புத்தகத்தைப் படித்திருந்தால், அவர் தினமும் என்ன செய்கிறாரோ, அதைச் செய்யமாட்டார் என்று காந்தி இந்திய அரசியலமைப்பின் நகலை எடுத்துக் காண்பித்தார்.
நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ளது. தலித்துக்கள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிகளின் பாதையை ஒரு சுவர் தடுக்கிறது என்றும், மோடியும் ஆர்எஸ்எஸ்ஸும் அந்த சுவரை சிமென்ட் சேர்த்து பலப்படுத்துகிறார்கள்.
மெல்ல மெல்ல (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) சுவர் வலுப்பெற்று வருகிறது. நாங்கள் (காங்கிரஸ்) அதை வலுவிழக்கச் செய்ய முயற்சித்தோம். ஆனால் (பாஜக) என்ற கான்கிரீட்டைச் சேர்ப்பதன் மூலம் அந்த சுவரை மேலும் பலப்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார்.
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஒரு வரலாற்று நடவடிக்கை. காங்கிரஸ் எங்கு ஆட்சிக்கு வந்தாலும் அதையே செய்யும் என்றும் காந்தி கூறினார்.