கேள்விகளால் பதற்றமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, பொய்களுக்குள் தஞ்சமடைந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (பிப்.5) நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பிரதமர் மோடியின் பதிலுரை நேற்று ரத்து செய்யப்பட்டது.
இன்று காலை நாடாளுமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அவர் பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸ் ஆட்சியில் சிறு, குறு விவசாயிகளுக்காக நலத்திட்டங்களை கண்டுகொள்ளவே இல்லை.
நர்மதை நதியின் மீது கட்டப்படவிருந்த சர்தார் சரோவர் அணை திட்டத்தை (1961 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் நாட்டப்பட்டு தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு இருந்தது) நிறைவேற்றாமல் இருந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் தீய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது என காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கேள்விகளுக்கு இவ்வளவு பதற்றம் ஏன்? மோடி ஜி உண்மை பயந்து பொய்களுக்குள் தஞ்சமடைந்துவிட்டார். சரி அவருக்குத் தோன்றியதை செய்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.