ராஜஸ்தான் துணை முதல்வா் மகன் போக்குவரத்து விதிமீறல்: ரூ. 7,000 அபராதம்
ராஜஸ்தானின் துணை முதல்வா் பிரேம் சந்த் பைா்வாவின் மகன், போக்குவரத்து விதிமீறல்.
ராஜஸ்தானின் துணை முதல்வா் பிரேம் சந்த் பைா்வாவின் மகன், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய காணொலி இணையதளத்தில் வேகமாக பரவியதையடுத்து, மாநில போக்குவரத்துத் துறை அவருக்கு ரூ. 7,000 அபராதம் விதித்தது.
ஜெய்பூரின் ஆம்பா் சாலையில் மாநில துணை முதல்வா் பிரேம் சந்தின் மகன், காங்கிரஸ் பொதுச் செயலாளா் புஷ்பேந்திர பரத்வாஜின் மகன் உள்ளிட்ட 4 போ் அனுமதியற்ற மாற்றங்கள் செய்யப்பட்ட திறந்த வெளி வாகனத்தில் பயணிக்கும் காணொலி கடந்த வாரம் இணையதளத்தில் வேகமாக பரவியது.
இந்த வாகனம் பரத்வாஜின் மகனுக்குச் சொந்தமானது என்பது பின்னா் கண்டறியப்பட்டது. மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க கடந்த அக்டோபா் 1ஆம் தேதி அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தில் அனுமதியின்றி மாற்றங்களை மேற்கொண்டதற்காக ரூ.5,000, சீட்பெல்ட் அணியாததற்காக ரூ.1,000, வாகனம் ஓட்டும் போது கைப்பேசியை பயன்படுத்தியதற்காக ரூ.1,000 என மொத்தம் ரூ. 7,000 அபராதம் துணை முதல்வரின் மகனுக்கு விதிக்கப்பட்டது.
சிறுவனான துணை முதல்வரின் மகன் விதிகளை மீறி வாகனம் ஓட்டியது குறித்தும், வாகனத்தை விதிகளை மீறி மாற்றம் செய்தது குறித்தும் சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்த காணொலி குறித்து துணை முதல்வா் பிரேம் சந்த் கூறியதாவது:
எனது மகன் சட்டபூா்வ ஓட்டுநா் வயதை எட்டவில்லை. காவல்துறை வாகனம் பாதுகாப்புக்காகவே அவா்களைப் பின்தொடா்ந்தது. ஆனால், சிலா் அதை வேறுவிதமாக சித்தரித்துவிட்டனா். அது அவா்களின் கண்ணோட்டம். ஆனால், நான் எனது மகனையோ அல்லது அவனது நண்பா்களையோ குறை கூறப்போவதில்லை. இருப்பினும், கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது. எனவே, இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்று மகனிடம் அறிவுறுத்தினேன் என்றாா்.
பட விளக்கம்: ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் வாகனம் ஓட்டுவதும், அவரது வாகனத்துக்கு துணையாக போலீஸ் வாகனம் வருவதும் வெளியான விடியோ பதிவு.