முகப்பு
இந்தியா

தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: பிரியங்கா கக்கர்!

அதீத நம்பிக்கைக் கொண்ட காங்கிரஸையும், திமிர்பிடித்த பாஜகவையும் ஆம் ஆத்மி தனியாக எதிர்த்துப் போராடும்..

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:50 PM
பகிர்:

தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா கக்கர் புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரûஸயும், திமிர் பிடித்த பாஜகவையும் நாங்கள் தனித்து எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள். அண்மையில் நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன், அதீத நம்பிக்கையின் காரணமாக இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக தில்லி சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு பூஜ்ஜிய இடங்களே இருந்தன. இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது.

ஹரியாணாவில் கூட்டணி அமைக்க "இண்டியா' கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது. கூட்டாளிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது அவசியம் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை. ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹரியாணாவில் பேரவைத் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கத் தவறிவிட்டன. ஆம் ஆத்மி ஹரியாணாவில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தாலும், காங்கிரஸ் பெரும்பான்மையை விட மிகக் குறைந்துவிட்டது. இது, ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு வழிவகுத்துள்ளது.

ஜம்மு}காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு கட்சியின் வளர்ச்சி சார்ந்த அரசியலே காரணம். வெற்றி பெற்ற வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக், மிகவும் கடினமாக உழைக்கும் நபர். ஆம் ஆத்மி கட்சியின் இயக்கம் மற்றும் போராட்ட காலத்தில் இருந்தே அவர் கட்சியுடன் பயணிப்பவர். அவரை கௌரவிக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை (செப்.10) ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார் என்றார் பிரியங்கா கக்கர்.

முழு கட்டுரையைப் படிக்க →