புதுச்சேரி பேரவைத் தேர்தலில் 41% கோடீஸ்வர வேட்பாளர்கள்!
புதுச்சேரி வேட்பாளர்களில் 41% பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதைப் பற்றி...
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 41 சதவிகித பேர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அந்த வேட்பாளர்களில் 23 சதவிகிதத்தினர் மீது குற்றவழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
மொத்தமாக 30 தொகுதிகளைக் கொண்டுள்ள புதுச்சேரியில் வருகிற ஏப்.9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
என்.ஆர். காங்கிரஸ் - பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், திமுக - காங்கிரஸ் தலைமையில் கூட்டணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்தும் போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், மார்ச் 23 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், 294 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களில் 34 பேர் தேசிய கட்சிகளில் இருந்து 63 பேர் மாநில கட்சிகளில் இருந்தும், பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் இருந்து 80 பேரும், சுயேச்சையாக 117 பேரும் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் சுமார் 66 பேர் (23 சதவிகிதம்) மீது குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 323 பேர் போட்டியிட்டவர்களில் 54 பேர் (17 சதவிகிதம்) மீது குற்றவழக்குகள் பதிவாகியிருந்தன.
காங்கிரஸின் 21 வேட்பாளர்களில் மூன்று பேரும், என்.ஆர். காங்கிரஸின் 16 வேட்பாளர்களில் 4 பேர் மீதும், திமுகவின் 12 வேட்பாளர்களில் 6 பேர் மீதும், பாஜகவின் 10 வேட்பாளர்களில் 5 பேர் மீதும் குற்றவழக்குகள் பதிவாகியுள்ளதாக தங்களின் வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் மூன்று பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 2 பேர் மீது ஐபிசி சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கும் பதிவாகியிருக்கிறது.
119 வேட்பாளர்கள் (41 சதவிகிதம்) தங்களை கோடீஸ்வரர்கள் என குறிப்பிட்டுள்ளனர். முக்கிய கட்சிகளில், காங்கிரஸ் கட்சியின் 21 வேட்பாளர்களில் 17 பேரும், என்.ஆர். காங்கிரஸின் 16 வேட்பாளர்களில் 16 பேரும், திமுகவின் 12 வேட்பாளர்களில் 11 பேரும், பாஜகவின் வேட்பாளர்களில் 10 பேரும் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
291 வேட்பாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,099 கோடிஎன்றும், இது ஒரு வேட்பாளருக்குச் சராசரியாக ரூ. 7.21 கோடி என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இவர்களில், அதிகபட்சமாக, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது பிரமாண பத்திரத்தில் தனக்கு சுமார் ரூ. 600 கோடி சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.