மீண்டும் தண்டவாளத்தில் சிலிண்டர்... தொடரும் ரயில் கவிழ்ப்பு சதிகள்!
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்கி - லக்ஸார் ரயில் பாதையில் எரிவாயு சிலிண்டர் வைத்து ரயிலைக் கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்கி - லக்ஸார் ரயில் பாதையில் எரிவாயு சிலிண்டர் வைத்து ரயிலைக் கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சித்துள்ளனர்.
ஹரித்வார் மாவட்டத்தின் தண்டேரா நகர் ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (அக். 12) காலை 6.45 மணியளவில் எரிவாயு சிலிண்டர் கிடந்துள்ளது. இதனைக் கண்ட பிசிஎன் சரக்கு ரயில் காவலாளி உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
ரயில்வே காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் எதுவும் அந்த வழியாக வரவில்லை.
ரயிலைக் கவிழ்க்க சதி செய்த மர்ம நபர்களின் விவரங்கள் தற்போது வரை எதுவும் தெரியவில்லை.
இதையும் படிக்க | மும்பையில் புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன
3 கிலோ எடை கொண்ட அந்த காலியான எரிவாயு சிலிண்டர் ரயில் தண்டவாளங்களின் நடுவில் கிடந்ததாகவும், தகவல் கிடைத்தவுடன் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று அதனை அகற்றியதால் விபத்து நடப்பது தவிர்க்கப்பட்டதாகவும் ஹரித்வார் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வபன் கிஷோர் தெரிவித்தார்.
ரயில்வே சட்ட விதிகளின் கீழ் இதுதொடர்பாக மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.