இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா வருகை!
நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது
இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், 17 இந்திய மீனவர்களையும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு
இருநாட்டினரும் கவனக்குறைவாக கடல் எல்லையை மீறுவதாகக் கூறி, இருநாட்டு மீனவர்களும் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். குறிப்பாக, இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகூட சில சமயங்களில் நடத்துகின்றனர்.
இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ வெளியீட்டின்படி, நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களின் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.