தில்லியில் மோசமான காற்று மாசுக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்!
காற்றின் மாசு உச்சத்தில் இருக்கும்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசு..
தேசிய தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆகிய இரு கட்சிகளும் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது,
யமுனா நதி நீரைக் குடிநீராக மாற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் தற்போது குளிப்பதற்கும் ஏற்றதாக இல்லை. அரவிந்த் கேஜரிவால் முன்னதாக பெரிய வாக்குறுதிகளை அளித்ததாகவும், ஆனால் அவற்றைச் செயல்படுத்த தவறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!
காற்றின் மாசு அளவு உச்சத்தில் இருக்கும்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசு தேவையற்ற விஷயங்களில் தலையிடுகிறது. துணைநிலை ஆளுநரும் அமைதியாக இருக்கிறார்.
உலகெங்கிலும் உள்ள பிற தலைநகரங்களில் காற்றின் மாசுவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால் தில்லியில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதெல்லாம் கட்சிகள் சாக்குப்போக்கு சொல்லிவருவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.
தலைநகரில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் மோசமடையும். கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.
மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் காற்று தரக் குறியீடு(AQI) 293 ஆகப் பதிவாகியுள்ளது. காற்றின் தரம் மோசமான பிரிவில் இருந்ததால் தில்லியில் இன்று காலை புகை மூட்டமாகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.