நீதிமன்றத்திலும் வந்துவிட்டது போலி.. எங்கே தெரியுமா?
குஜராத்தில் இயங்கி வந்த போலியான நீதிமன்றம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் காவல்துறையினர், ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்த முதல் தகவல் அறிக்கையில், கடந்த 2019 - 2024ஆம் ஆண்டு வரை போலியாக நீதிமன்றத்தை நடத்தி, பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளையும் பிறப்பித்திருப்பதாக மோரிஸ் சாமுவேல் என்ற நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டில் எத்தனையோ போலிகளை மக்கள் கேட்டிருப்பார்கள், போலி மருத்துவர், போலி அரசு அதிகாரி, போலி போலீஸ், போலியாக இயங்கி வந்த சுங்கச் சாவடி கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக.. (?) நாட்டில் போலியாக இயங்கி வந்த நீதிமன்றம் குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துடன் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த சம்பவத்தில், நீதிமன்றத்தை நடத்தி வந்த 37 வயது நபர் மோரிஸ் சாமுவெல் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது, முறைகேடு செய்தல், தவறான தகவல்களை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் நீதிமன்ற நீதிபதி ஹார்திக் தேசாய் அளித்த புகாரின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பால்டி பகுதியில் உள்ள அரசு நிலத்தின் மீது உரிமை கோரி பப்ஜூஜி தாக்கூர் என்பவர் நகர சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதுதான் இந்த போலி நீதிமன்றம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலி நீதிமன்றத்தில், மோரிஸ் ஒரு நீதிபதியாக செயல்பட்டு, 2019 ஆம் ஆண்டு அரசு நிலத்தின் ஒரு பகுதியின் சரியான உரிமையாளர், பப்ஜூஜி தாக்கூர் என்று, உரிமைகோரல் வழக்கில் தீர்ப்பளித்திருந்ததன் நகலை, சிவில் நீதிமன்றத்தில் பப்ஜூஜி தாக்கல் செய்தபோதுதான், இப்படி ஒரு போலி நீதிமன்றம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் காவல்துறை வெளியிட்ட தகவலில், "மோரிஸ் தன்னை ஒரு நடுவராகக் கூறி, தனது வாடிக்கையாளர்களுக்கு தவறான உரிமைகோரல் அறிக்கைகளை அளித்துள்ளார், காந்திநகரில் அவர் அமைத்த போலி நீதிமன்றத்தில் எந்த வித சந்தேகத்துக்கும் இடமின்றி உண்மையான நீதிமன்றத்தைப் போலவே உருவாக்கி நடத்தி வந்துள்ளார் என்றும், அவர் நீதிமன்றத்தில் நீதிபதி போல அமர்ந்திருக்கும் புகைப்படங்களையும் காவல்துறையினர் அளித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தன்னை நீதிபதியாக வைத்து ஒரு நீதிமன்றத்தைப் போன்று உருவாக்கியிருப்பதாக காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றத்தில், அவரே வழக்குகள் தாக்கல் செய்து, உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன் மூலம், மனுதாரர்களை கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களுக்கு போலியான உத்தரவுகள் மூலம் உரிமையாளர்களாக்க முயன்றுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், போலி அரசு அலுவலகம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்து, சிலர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், மோர்பி மாவட்டத்தில் போலி சுங்கச்சாவடி நடத்தி, பயணிகளிடம் பணம் பறித்த சம்பவங்களும் பதிவாகியருக்கின்றன. இப்போது முதல் முறையாக போலி நீதிமன்றம் அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நடத்தி வந்தவர் பிடிபட்டுள்ளார்.