முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீர் ஆய்வுக் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? ப. சிதம்பரம் கேள்வி

ஜம்மு - காஷ்மீர் ஆய்வுக் கூட்டம் துணை நிலை ஆளுநர் தலைமையில் நடத்தப்பட்டதை ப. சிதம்பரம் விமர்சித்தது பற்றி...

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:46 AM
ப. சிதம்பரம் (கோப்புப் படம்)
பகிர்:

ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனோஜ் சின்ஹா தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் காவல் துறையின் மூத்த அதிகாரிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆனால், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஒமர் அப்துல்லா அல்லது அமைச்சர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தலைமையில் சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்த மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை.

ஜம்மு - காஷ்மீருக்கு விதிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளின்படி, காவல்துறையானது ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதல்வரையும், அரசாங்கத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், முதல்வருக்கு அதிகாரம் இல்லை.

இதனால்தான், ஜம்மு - காஷ்மீரை முழுமையான மாநிலம் இல்லை எனக் கூறப்படுகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுப்பது இன்றியமையாதது ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு..

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

கடந்த 16-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →