ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கெதிரான ஆபரேஷன் த்ராஷி-1 நடவடிக்கை தீவிரம்...
ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற ஆபரேஷன் த்ராஷி-1 நடவடிக்கையில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் ஞாயிற்றுக்கிழமை(பிப். 22) கண்டெடுக்கப்பட்டது. பயங்கரவாதச் செயல் தடுப்பு நடவடிக்கையான ஆபரேஷன் த்ராஷி-1 ஜம்மு - காஷ்மீரில் 36-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
அதில், முக்கியமாக பாகிஸ்தானைச் சார்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜே.ஏ.எம்.) பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையின் என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தஞ்சமடைந்திருந்த மண் குடிசை வீட்டில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் அந்த வீடு தீப்பற்றி கருகியது. அதில், அங்கிருந்த 3 பயங்கரவாதிகள் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் பலியான ஒரு நபர், தேடப்பட்டு வந்த ஜே. ஏ. எம். தளபதி சைஃபுல்லாவாக இருக்கலாம் என்பது புலனாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஜம்மு - காஷ்மீருக்குள் நுழைந்த சைஃபுல்லா, கடந்த 2024 ஜூலையில், 4 பாதுகாப்புப்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, வெவ்வேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் தப்பிய அந்த நபர் ஆபரேஷன் த்ராஷி-1-இல் இன்று கொல்லப்பட்டார்.