முகப்பு
இந்தியா

அதானி நலன்களை பாதுகாக்க செபி தலைவா் சூழ்ச்சி: ராகுல் குற்றச்சாட்டு

தொழிலதிபா் அதானியின் நலன்களை பாதுகாக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் பங்குச்சந்தையில் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம்

Updated On : 28 அக்டோபர், 2024 at 8:48 PM
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி
பகிர்:

புது தில்லி: தொழிலதிபா் அதானியின் நலன்களை பாதுகாக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் பங்குச்சந்தையில் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தாா்.

செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் மாதபி புச் முக்கிய பதவிகளை வகித்தாா். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதபி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதுபோல மேலும் பல குற்றச்சாட்டுகளை மாதபி மீது அக்கட்சி முன்வைத்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட காணொலியில், ‘மாதபி புச் முறைகேடு ஆரம்பத்தில் கற்பனை செய்ததைவிட ஆழமானதாக உள்ளது. சில்லறை முதலீட்டாளா்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள மாதபி, அதானியின் நலன்களை பாதுகாக்க பங்குச்சந்தையில் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

சாமானிய இந்தியா்கள் மற்றும் அவா்களின் முதலீடுகளை பாதுகாக்கும் பொறுப்புள்ளவா்கள், பரந்த அளவில் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு தங்கள் பொறுப்புகளை கைவிட்டுள்ளனா். இந்த முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் தொடா்ந்து விசாரித்து வருகிறது’ என்றாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சி கூறுகையில், ‘பங்குச்சந்தையை பாதுகாப்பாக பராமரித்து, சாமானியா்களின் முதலீடுகள் அபாயத்தில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே செபி தலைவரின் பணி. ஆனால், குறிப்பிட்ட ஒரு நபா் பலனடைய பங்குச்சந்தையில் செபி தலைவா் சூழ்ச்சியில் ஈடுபட்டால், பங்குச்சந்தையில் முதலீடு செய்த அனைவரின் பணமும் அபாயத்துக்குள்ளாகும்’ என்று தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →