இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர பல ஆண்டுகளாக காங்கிரஸ் சதி செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குற்றஞ்சாட்டினாா்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் மாணவா்கள் இடையே பேசுகையில், ‘பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும்’ என்றாா்.
இதைத்தொடா்ந்து ராகுலின் கருத்தை விமா்சித்து மாயாவதி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் இல்லை; ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதாக தெரிவித்து மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அக்கட்சி கனவு காண்கிறது. வருங்காலத்தில் அக்கட்சியால் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது. அக்கட்சியின் நாடகம் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தற்போது இந்தியா நல்ல நிலைக்கு வரும்போது பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை காங்கிரஸ் ரத்து செய்யும் என்று வெளிநாட்டில் அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா். இதன் மூலம், இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர பல ஆண்டுகளாக காங்கிரஸ் சதி செய்வது தெளிவாகியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தையும், இடஒதுக்கீட்டையும் பாதுகாக்க முயற்சிப்பதாக பாசாங்கு செய்யும் காங்கிரஸ் குறித்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீதி கிடைக்காததால் அம்பேத்கா் ராஜிநாமா: தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பதே உண்மை. அக்கட்சியிடம் இருந்து நீதி கிடைக்காததாலேயே மத்திய சட்ட அமைச்சா் பதவியில் இருந்து சட்டமேதை பி.ஆா். அம்பேத்கா் ராஜிநாமா செய்தாா். எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றாா்.