முகப்பு
இந்தியா

எந்த உதவியும் வழங்கவில்லை; அனுமதியின்றி படம் எடுத்தார்கள்! வினேஷ் போகத்

ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது பற்றி வினேஷ் போகத் பேசியது...

Updated On : 11 செப்டம்பர், 2024 at 12:14 PM
வீனேஷ் போகத், பிடி உஷா - ANI
பகிர்:

ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட போது, அதிகபட்ச உதவியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா வழங்கவில்லை என்று வினேஷ் போகத் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

மேலும், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தனக்கு ஆதரவளிப்பது போன்று புகைப்படங்களை எனது அனுமதியின்றி எடுத்து அரசியலாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம்

Advertisement

பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், கடைசி நிமிடத்தில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது. இறுதிச் சுற்று வரை முன்னேறியதால், அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.

இருப்பினும், அனைவரின் கோரிக்கைகளையும் ஒலிம்பிக் சங்கம் நிராகரித்துவிட்டது.

இதனிடையே, கடும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் மயக்கமடைந்த வினேஷ் போகத், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை நலம் விசாரிக்க சென்ற பி.டி.உஷாவும் அவரும் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

வினேஷ் போகத்தை ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சந்தித்த பிடி உஷா. - ANI

வினேஷ் போகத் குற்றச்சாட்டு

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு வினேஷ் போகத் அளித்த பேட்டியில் தகுதிநீக்கம் குறித்து பேசியதாவது:

“மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும்போது வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது, வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து செல்லும்போது, அந்த தருணத்தில் என்னுடன் நீங்கள் நிற்பதாக எல்லோரிடமும் காட்டுவதற்காக என் அனுமதியின்றி புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளனர். உங்கள் ஆதரவை அவ்வாறு தெரிவித்திருக்க தேவையில்லை.

இந்த சம்பவத்தால் உடைந்து போனேன். எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. பி.டி.உஷா என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னணி அரசியலில் நிறைய நடக்கிறது. என்னை மல்யுத்தத்தை விடவேண்டாம் என்று பலரும் கூறினர். நான் எதற்காக தொடர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.