முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் போட்டியிடும் இந்தியாவின் பணக்காரப் பெண்!

சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்

Updated On : 13 செப்டம்பர், 2024 at 5:46 AM
சாவித்ரி ஜிண்டால்
பகிர்:

இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக விளங்கும் சாவித்ரி ஜிண்டால், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

மறைந்த தொழிலதிபர் ஓம் பிரகாஷ் ஜிண்டாலின் மனைவியான 74 வயதாகும் சாவித்ரி ஜிண்டால், ஹரியாணாவின் ஹிசார் தொகுதியில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான வியாழக்கிழமையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இவர் 29.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் (இந்திய மதிப்பில் 2.44 லட்சம் கோடி) இந்தியாவின் பணக்கார பெண் என்று அறியப்படுகிறார்.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், சாவித்ரி ஜிண்டால் பேசியதாவது ``ஹிசாரின் வளர்ச்சிக்காவும், மாற்றத்திற்காகவும், சேவை செய்வதாக நான் உறுதியளித்துள்ளேன். ஹிசார் மக்களே எனது குடும்பம்; எனது கணவர்தான் இந்த குடும்பத்துடன் எனது உறவை நிலைநிறுத்தினார்.

சாவித்ரி ஜிண்டால் வேட்புமனு தாக்கல் செய்தபோது

ஜிண்டால் குடும்பம் எப்போதும் ஹிசாருக்கு சேவை செய்யும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கும், அவர்களின் நம்பிக்கையை பராமரிப்பதற்கும் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஹரியாணாவின் அமைச்சரும் ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தாவை எதிர்த்துதான் சாவித்ரி ஜிண்டால், ஹிசார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சாவித்ரி ஜிண்டால், ஏற்கெனவே ஹிசார் தொகுதியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் 2005, 2009 ஆம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், 2013 ஆம் ஆண்டில் சிங் ஹூடா அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் சாவித்ரி ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால் பாஜகவில் இணைந்ததால், சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸைவிட்டு வெளியேறினார்.

ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும்; தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதியில் அறிவிக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →