சுரங்கப்பாதையில் மழை நீரில் சிக்கிய கார்: இருவர் பலி!
கனமழையால் பழைய ஃபரிதாபாத் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் கார் சிக்கியதால் இருவர் பலி.
ஹரியாணாவில் உள்ள பழைய ஃபரிதாபாத் சுரங்கப்பாதையில் மழை நீரில் கார் சிக்கியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஹரியாணாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பழைய ஃபரிதாபாத் அருகேயுள்ள சுரங்கப்பாதையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வேகமாக வந்த எஸ்யூவி கார் ஒன்று போலீஸாரின் தடுப்பை மீறி சுரங்கப்பாதையில் நுழைந்தது. அந்த சுரங்கப்பாதையில் 10 முதல் 12 அடி வரை மழை நீர் தேங்கியிருந்தது.
Advertisement
Advertisement
கார் நீரில் மூழ்கிய நிலையில் காரில் பயணித்த இருவரும் நீரில் மூழ்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஜேசிபி முயற்சிகளின் அடிப்படையில் கார் வெளியே கொண்டுவந்தனர். ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
நீரில் மூழ்கி இறந்தவர்கள் குருகிராம் கிளையில் உள்ள தனியார் வங்கி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. அதில் ஒருவர் மேலாளராகப் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் இடத்தில் அடர்ந்த இருள் சூழ்ந்திருந்ததால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரிலிருந்தவர்கள் தப்பிக்க முயன்றும், சரியான நேரத்தில் வெளியே வர இயலாமல் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கனமழை காரணமாக ஃபரிதாபாத் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.