முகப்பு
இந்தியா

தங்கம் கடத்துவோரின் புதிய டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை

தங்கம் கடத்துவோரின் புதிய டெக்னிக் குறித்து விமான நிலையங்களுக்கு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 8:08 AM
விமான நிலையம்
பகிர்:

சென்னை: பயணிகள் முழுவதும் நிரம்பிய விமானத்திலிருந்து, சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒன்று அல்லது இரண்டு பயணிகளில் ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதித்தால், அவர்கள் நிச்சயமாக தங்கக் கடத்தல் கும்பல்தான் என்று சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு சுங்கத் துறை எச்சரித்துள்ளது.

அண்மையில், சுங்கத் துறை தில்லி தலைமை அலுவலகம், சென்னை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு அனுப்பியிருக்கும் அறிவுறுத்தல் கடிதத்தில், புதிய டெக்னிக் குறித்து தெரிவிக்கப்படுள்ளது.

அதாவது, குறைந்த அளவிலான தங்கத்தை நிறைய பயணிகள் ஒரே விமானத்தில் கடத்தி வருகிறார்கள். இவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அதில் ஒருவர் திடிரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது போலவோ, அல்லது விமான நிலைய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடவோ செய்கிறார். இதனால், மற்றவர்கள் எளிதாக விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல உதவுகிறது என்று அறிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தங்கம் உள்ளிட்ட கடத்தலில் ஈடுபடும் குழுவினர், இதுபோன்ற உக்திகளைக் கடைப்பிடித்து, சுங்கத் துறை கெடுபிடியிலிருந்து தப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, துபை, அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து, பெரிய விமானங்களில் ஏராளமான விமானிகள் ஒரே நேரத்தில் தரையிறங்கும்போது, அனைவரையும் முறையாக பரிசோதனை நடத்தி தங்கக் கடத்தலைக் கண்டுபிடிப்பது என்பது சவாலானது.

இந்த நிலையில்தான், இதுபோன்ற சம்பவங்கள், கடந்த ஓராண்டாக நடந்து வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 113 பயணிகள் துபை விமானத்திலிருந்து வந்தனர். அவர்கள் 13 கிலோ தங்கம், 500 செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களைக் கடத்தி வந்தனர். அது பறிமுதல் செய்யப்பட்டது.

அது மட்டுமல்லாமல், சிறிய அளவிலான பொருள்களுடன் யாரேனும் சிக்கும்போது, அவர்கள் மீது முழு கவனமும் செலுத்தப்படும் அதே நேரத்தில் பெரிய கடத்தல்பொருள்களுடன் பலரும் தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பயணிகளின் தரவுகளை ஆராய்ந்து, ஒவ்வொரு விமானத்திலும், அடிக்கடி பயணிக்கும் பயணிகளின் விவரங்களை எடுத்து அவர்களை தனியே சோதிக்க வேண்டும், என்றும், சில சாதாரண பயணிகளிடம்கூட தங்கத்தைக் கொடுத்து கடத்திவந்ததும், அவர்களுக்கு கமிஷன் கொடுத்து தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் கும்பலும் செயல்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →