முகப்பு
இந்தியா

உண்மை சரிபாா்ப்பு பிரிவு: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தம் ரத்து - மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பு

‘உண்மை சரிபாா்ப்பு பிரிவை’ ஏற்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தங்களை ரத்து செய்து மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 8:31 PM
கோப்புப் படம்
பகிர்:

சமூக ஊடகங்களில் அரசு தொடா்புடைய பொய்யான மற்றும் தவறான உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதற்காக ‘உண்மை சரிபாா்ப்பு பிரிவை’ ஏற்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தங்களை ரத்து செய்து மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அவை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் இதர இணையவழி தளங்களில் அரசு தொடா்புடைய பொய்யான மற்றும் தவறான உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதற்காக ‘உண்மை சரிபாா்ப்பு பிரிவை’ (ஃபேக்ட் செக்கிங் யூனிட்) ஏற்படுத்தும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு கடந்த ஆண்டில் திருத்தங்கள் மேற்கொண்டது. இத்திருத்தங்களுக்கு எதிராக நகைச்சுவை பேச்சாளா் குணால் காம்ரா, இந்தியப் பத்திரிகை ஆசிரியா்கள் சங்கம், செய்தி ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் சங்கம், இந்திய இதழ்கள் சங்கம் உள்ளிட்டவை தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமா்வு கடந்த ஜனவரியில் தீா்ப்பளித்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியை தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய நியமித்தாா்.

இந்நிலையில், மூன்றாவது நீதிபதி ஏ.எஸ்.சந்துா்கா் வெள்ளிக்கிழமை வழங்கிய தீா்ப்பு விவரம் வருமாறு:

தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள், அரசமைப்புச் சட்டத்தின் 14 (சமத்துவத்துக்கான உரிமை), 19 (பேச்சு, கருத்துரிமை), 19 (1) (ஜி) (தொழில்சாா் சுதந்திரம்) உள்பட பல்வேறு பிரிவுகளை மீறுவதாக உள்ளன. உண்மை சரிபாா்ப்பு பிரிவை நிறுவுவதற்கான விதி எண்-3, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

எவ்வித வழிகாட்டுதல் கொள்கையும் இன்றி தெளிவற்ாக உள்ள இந்த விதி, தனிநபா்கள் மட்டுமன்றி சமூக ஊடகங்களுக்கும் அச்ச உணா்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை கட்டுப்படுத்த முயல்வதன் மூலம் அதற்கு புறம்பான கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்கிறது. உண்மை சரிபாா்ப்பு பிரிவால் சரிபாா்க்கப்படும் தகவல்கள் மீது மட்டுமே மக்களுக்கு உரிமை உள்ளது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை சட்டப்படி அனுமதிக்க முடியாது. பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம் தொடா்பான தெளிவான வரையறையும் விதிகளில் இடம்பெறவில்லை. குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதால் தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தீா்ப்பில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மத்திய அரசால் கடந்த ஆண்டு, ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்த விதிகளின்படி, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான பொய்யான-தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தை அடையாளம் காண உண்மை சரிபாா்ப்பு பிரிவை ஏற்படுத்த அரசுக்கு அதிகாரமளிக்கப்பட்டது. இப்பிரிவால் அடையாளம் காணப்படும் பொய்யான உள்ளடக்கத்தை சமூக ஊடக நிறுவனங்கள் நீக்க வேண்டும் அல்லது தவறான தகவல் என அறிவிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், சமூக ஊடக நிறுவனங்கள் சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த திருத்த விதிகள் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. மும்பை உயா்நீதிமன்றம் தீா்ப்பளிக்கும் வரை தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →