திருப்பதிக்கு இதுவரை நெய் விநியோகிக்கவில்லை: அமுல் நிறுவனம் விளக்கம்
திருப்பதி லட்டில் அமுல் நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்பட்டதாக வந்த செய்தி உண்மையல்ல என்று அந்த நிறுவனம் விளக்கம்.
திருப்பதி கோயிலுக்கு நாங்கள் ஒருபோதும் நெய் விநியோகம் செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பது பரிசோதனையில் உறுதியானதையடுத்து இந்த விவகாரம் நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே திருப்பதி லட்டு செய்வதற்கு அமுல் நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
தொடர்ந்து, திருப்பதி கோயிலுக்கு நாங்கள் ஒருபோதும் நெய் விநியோகம் செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெயன் மேத்தா கூறுகையில், 'திருப்பதி லட்டிற்கு அமுல் நிறுவனத்தின் நெய் பயன்படுத்தபபட்டதாக வந்த செய்தி உண்மையல்ல. திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நிறுவனம் இதுவரை நெய் எதுவும் விநியோகம் செய்யவில்லை. அமுல் நிறுவனத்தின் மீது சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தவறான தகவல் பரவுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்' என்று கூறினார்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெயன் மேத்தா கூறுகையில், 'திருப்பதி லட்டிற்கு அமுல் நிறுவனத்தின் நெய் பயன்படுத்தபபட்டதாக வந்த செய்தி உண்மையல்ல. திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நிறுவனம் இதுவரை நெய் எதுவும் விநியோகம் செய்யவில்லை. அமுல் நிறுவனத்தின் மீது சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தவறான தகவல் பரவுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும்' என்று கூறினார்.
மேலும் ஆமதாபாத் சைபர் கிரைமில் இதுகுறித்து அமுல் நிறுவனம் புகார் அளித்துள்ளது. முன்னதாக, சமூக வலைத்தளத்திலும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டு விவகாரத்தினால் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து கேள்வி எழும்பியுள்ளது.