திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 13ல் ஆழ்வார் திருமஞ்சனம்!
திருப்பதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் பற்றி..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 13ல் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அதன்படி, கோதண்டராமர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 17 முதல் 25 வரை நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக பாரம்பரிய முறையில் வரும் 13-ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடக்கிறது. அப்போது கோயிலின் மூலவர் அறை, சுவர்கள், மேற்கூரைகள், மாடங்கள், தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் உள்பட கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன்பிறகு, நறுமணப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புனித நீர் கலவையைக் கோயில் வளாகம் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பிறகு மூலவருக்குப் பூஜைகள் முடிந்ததும் சுவாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.