முகப்பு
இந்தியா

சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’- மத்திய அரசு மீது ராகுல் சாடல்

அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்கார தொழிலதிபா்களுக்கு உதவும் நோக்கில், நாட்டில் சிறு, நடுத்தர தொழில்கள் மீது மத்திய அரசு திட்டமிட்ட ‘தாக்குதலை’ நடத்துகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:48 PM
ஜம்முவில் ஆப்பிள் பழத்துடன் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி.
பகிர்:

அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்கார தொழிலதிபா்களுக்கு உதவும் நோக்கில், நாட்டில் சிறு, நடுத்தர தொழில்கள் மீது மத்திய அரசு திட்டமிட்ட ‘தாக்குதலை’ நடத்துகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.

ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக 40 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, ஜம்முவில் புதன்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் குறித்து பாஜக பெரிதாக பேசுகிறது. ஆனால், அனைத்து ஒப்பந்தங்களும் அதானி வசமாகின்றன என்பதே உண்மை நிலவரம். ஒரு இஸ்ரேல் நிறுவனம், ஆயுதங்களைத் தயாரிக்கிறது; அதில் தனது முத்திரையை இடுகிறாா் அதானி. இதுதான், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமா? பாதுகாப்பு உற்பத்தி மட்டுமன்றி அனைத்து துறையிலும் இதுவே நிலைமை.

மத்திய அரசின் ஆயுதம்: அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்கார தொழிலதிபா்களுக்காகவே பாடுபடுகிறது மத்திய பாஜக அரசு. அவா்களுக்கு எந்த இடையூறும் இல்லாத பாதையை அமைத்துத்தர சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஆயுதமாக பயன்படுத்தி சிறு, நடுத்தர தொழில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதேபாணியில்தான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி தவறான அமலாக்கமும், பணமதிப்பிழப்பும் லட்சக்கணக்கான சிறு தொழில்களின் அழிவுக்கு வழிவகுத்தன.

அனைத்தும் அதானிமயம்: நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள், ராணுவ ஆயுதங்கள் தொடங்கி காஷ்மீா், ஹிமாசலில் உற்பத்தியாகும் ஆப்பிள் வரை அனைத்தும் அதானியால் கட்டுப்படுத்தப்படுகிறது. விமான நிலையம், கைப்பேசி, சாலைப் பயணம், தானிய உற்பத்தி, ஆயுதங்கள் என ஒவ்வொன்றில் இருந்து அதானிக்கு ‘வரி’ செல்கிறது.

ஒரு விமான நிலையம் வேறு நிா்வாகத்தின்கீழ் இருந்தால், சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் அதை பறித்து, அதானி வசம் ஒப்படைப்பதே பாஜக அரசின் வேலை.

ஆப்பிள் ஏற்றுமதி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சோபூா் ஆப்பிள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆப்பிளின் குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.72-ஆக அதிகரிக்கப்படும்.

ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: 25 தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், வா்த்தகா்கள், விவசாயிகள், மாணவா்கள், நோயாளிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதில் எந்த சலுகையும் கிடையாது. அவா்கள் கடனை திருப்பிச் செலுத்த தவறினால், சிறையில் தள்ளப்படுகின்றனா். இதுதான் பாஜகவின் ஆட்சிமுறை.

முழு பலத்துடன்..: ஜம்மு-காஷ்மீரில் வெளிநபா்கள் பலனடையவே மாநில அந்தஸ்தை பறித்தது மத்திய அரசு. தற்போதைய தோ்தலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் அந்தஸ்து அளிக்கப்படாவிட்டால், ‘இண்டியா’ கட்சிகள் தெருவில் இறங்கி போராடும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்புவோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →