பிகாருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று நிதி அயோக் முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிகாரின் மீது பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்தி வருவதாகவும், எந்த காரணத்துக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு அந்தஸ்து கிடையாது
பிகார் மாநிலம் பாட்னாவில் தனது 80-ஆவது பிறந்த நாளை மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி புதன்கிழமை கொண்டாடினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஜித்தன் ராம் பேசியதாவது:
“சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்புவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், கடைசி நிதிநிலை அறிக்கையில் மாநிலத்துக்கு எவ்வளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்க வேண்டும். ரூ. 300 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிகார் மீது பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க மாட்டோம் என்று நிதி ஆயோக் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. பிகாரின் வளர்ச்சி எந்த சூழலிலும் நின்றுவிடப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார், மத்திய அரசிடம் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரினார். கடந்த ஜூலை 22-ஆம் தேதி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று கூறினார்.
அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் 2012-ஆம் ஆண்டு அறிக்கையின்படி பிகாருக்கு வழங்க முடியாது எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பிகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.