நெருக்கடியில் தக்காளி விவசாயிகள்: பாஜகவை விமர்சித்த அகிலேஷ்!
விவசாயிகளின் அடிப்படைச் செலவுகளைக்கூட பாஜக அரசு புறக்கணிக்கிறப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தக்காளி விவசாயிகள் தங்களின் அடிப்படைச் செலவுகளைகூட வசூலிக்க முடியாத நெருக்கடியான நிலையில் உள்ளதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
மாநிலத்தில் தக்காளி விவசாயிகள் தங்கள் அடிப்படைச் செலவுகளைக் கூட வசூலிக்க முடியவில்லை. பாஜக அரசு விவசாயத்தையும் விவசாயிகளையும் எவ்வளவு புறக்கணிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
உற்பத்தியை அதிகரிப்பதில் பாஜக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பொருள்களை வாங்குவதையும், விற்பதையும் ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதன்மூலம் அவர்கள் (ஒரு இடைத்தரகராக) சம்பாதிக்கிறது.
பொருளாதாரம் மற்றும் அரசியல் இரண்டிலும் பாஜகவின் அணுகுமுறை இடைத்தரகர்களை மையமாகக் கொண்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் நிலங்களையும் வணிகங்களையும் பெருநிறுவணங்களுக்கு ஒப்படைக்க பாஜக விரும்புகிறது. இதனால் அவர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்க முடியும்.
தற்போது ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களை மேற்கோள் காட்டிய யாதவ், பாஜக அரசு கொண்டுவந்த கருப்புச் சட்டங்கள் அவர்களின் தீய நோக்கங்களுக்கு சான்று. ஆனால் இந்த சட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. விவசாயிகளின் விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமைக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.