மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!
மசூதியில் காவிக் கொடிகளை ஏந்தி ஹிந்து அமைப்பினர் கோஷமிட்டதால் பரபரப்பு.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதியில் ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது.
ஹிந்துக்களின் பண்டிகையான ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக ஹிந்து அமைப்பினர் நடந்துகொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜில் பல இடங்களில் ராம நவமி கொண்டாடப்பட்ட நிலையில், சிக்கந்தரா பகுதியில் இருக்கும் சையத் சலார் காசி தர்காவில் நேற்று ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அந்தப் பகுதியில் பேரணி சென்ற ஹிந்து அமைப்பினர் திடீரென தர்காவின் மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்தியபடியே கொடிகளை அங்கு கட்ட முயன்றுள்ளனர். மேலும், தர்காவுடன் கூடிய அந்த மசூதியை இடித்து கோவில் கட்டவேண்டும் என்றும் கூறி கோஷமிட்டுள்ளனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஹிந்து அமைப்பினரை தர்காவில் இருந்து வெளியேற்றினர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.