ராணுவ கட்டுப்பாட்டில் தில்லி நீதிமன்றம்: தஹாவூா் ராணா இன்று ஆஜர்!
தில்லி பட்டியாலா நீதிமன்றம் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பது பற்றி...
மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் பயங்கராவாதி தஹாவூர் ராணா நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், தில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தில்லி பட்டியாலா நீதிமன்றம் அமைந்துள்ள பகுதி முழுவதும் துணை ராணுவப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி ஜெயா ராவ் தலைமையிலான குழுவினர், தஹாவூா் ராணாவை அழைத்துக் கொண்டு தனி விமானம் மூலம் அமெரிக்கவிலிருந்து நேற்று மாலை தில்லி புறப்பட்டனர்.
அவர்கள் வருகைதரும் விமானம், இன்னும் சற்றுநேரத்தில் தில்லியில் தரையிறங்கவுள்ளது.
இதையும் படிக்க : நாடு கடத்தப்பட்டார் தஹாவூா் ராணா! தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!
தில்லி வந்தவுடன் தஹாவூர் ராணாவை என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுவாரா என்ற கேள்வி நீடித்து வருகின்றது.
தில்லி என்.ஐ.ஏ. தலைமை அலுவலகம், பட்டியாலா நீதிமன்றம் மற்றும் திகார் சிறை ஆகியவை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தில்லி பட்டியாலா நீதிமன்றத்துக்கு வருகைதரும் அனைவரையும் பரிசோதனைக்கு பிறகே துணை ராணுவப் படையினர் அனுமதித்து வருகின்றனர்.
நீதிமன்றத்தில் ராணாவை ஆஜர்படுத்தும் பட்சத்தில் வழக்கை என்.ஐ.ஏ. நீதிபதி விசாரிப்பார். ராணா வழக்கில் என்.ஐ.ஏ. தரப்பில் வாதாடுவதற்காக சிறப்பு வழக்கறிஞராக நரேந்திர மானை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதனிடையே, தில்லி திகாரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் ராணாவை அடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, உடனடி நடவடிக்கைக்கு தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.