பெங்களூரு விமான நிலையத்தில், விமானங்களின் புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையில் ஹிந்தி மொழி அறிவிப்பு அகற்றப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், உண்மையில், ஹிந்தி அறிவிப்பு அகற்றப்படவில்லை என்றும், இதுவரை விமான நிலையத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பு வெளியாகி வந்திருப்பதாகவும் கேம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தை நிர்வகித்து வரும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களில், கன்னடத்தில் வெளியாகும் அறிவிப்புப் பலகையையும், ஆங்கிலத்தில் வெளியாகும் அறிவிப்பையும் திரட்டி, ஹிந்தி அகற்றப்பட்டுவிட்டதாகப் பதிவுகள் வெளியாகின. இதற்கு, பெங்களூரு என்பது அதிகப்படியான மக்கள் பயணிக்கும் விமான நிலையம் என்பதால், அதில் ஹிந்தி அறிவிப்பு ஏன் அகற்றப்பட்டது என்றும் பல பயனர்கள் கேள்வும் சிலர் கண்டித்து கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சிலர், இதற்கு ஆதரவாகவும் கருத்திட்டிருக்கிறார்கள். வட மாநிலங்களுக்குச் செல்வோர் எப்படி அறிவிப்புப் பலகையைப் பார்த்து புரிந்து கொள்கிறார்களோ அப்படித்தான் ஹிந்தி மட்டும் தெரிந்தவர்களும் பெங்களூரு விமான நிலையம் வந்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கருத்துகள் வந்துள்ளன.
இந்த நிலையில்தான், பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், எங்களது விமான புறப்பாடு அறிவிப்புப் பலகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பல காலமாக இருக்கும் வழக்கப்படி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. விமான நிலையம் முழுவதும் வழிகாட்டும் பலகைகள் மட்டுமே ஆங்கிலம், கன்னடம், ஹிந்தியில் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.