ஜம்மு - காஷ்மீர்: லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேரின் வீடுகள் இடிப்பு!
ஜம்முவில் பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பில் செயல்பட்டு வந்த மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு, நேற்று (ஏப்.25) இடிக்கப்பட்டதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா மாவட்டத்திலுள்ள முரான் கிராமத்தில் பயங்கரவாதியான எஹ்ஸான் - உல் - ஹக் ஷேக் என்பவரின் வீடு அடையாளம் காணப்பட்டு இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.
Advertisement
இதேபோல், குல்காம் மாவட்டத்திலுள்ள மதால்ஹாமா கிராமத்தில், கடந்த 2003-ம் ஆண்டு முதல் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் செயலாற்றி வந்த ஜாகிர் அஹமது கனி என்பவரின் வீட்டை அதிகாரிகள் இடித்துள்ளனர்.
மேலும், ஷோபியனில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஷாஹித் அஹமது குதாயின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட ஆசிஃப் அஹமது ஷேக் திரால் மற்றும் ஆதில் தோகர் பிஜ்பெரா ஆகிய இருவரின் வீடுகளும் நேற்று இடித்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்குத் தடை!