ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!
கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை
கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் கலகப்பா என்பவரின் வீட்டில் லோக்ஆயுக்தா புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, கலகப்பாவிடமிருந்து கணக்கில் வராத ரூ. 30 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், மாத சம்பளமாக வெறும் ரூ. 15,000 மட்டுமே பெற்றுவந்த கலகப்பாவிடம் 24 வீடுகள், 4 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 4 வாகனங்கள், 350 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Advertisement
இந்தச் சொத்துகள் அனைத்தும் கலகப்பா, அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலகப்பாவும் முன்னாள் பொறியாளரான சின்சோல்கர் என்பவரும் சேர்ந்து, முழுமையடையாத 96 திட்டங்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, அதன்மூலம் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்துள்ளனர்.