பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!
வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாயில் பணியாற்றிய 9 பேர் நிலச்சரிவில் பலி..
பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்தனர்.
டான்யோர் நுல்லாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. நீர் கால்வாயை சரிசெய்யும்போது தொழிலாளர்கள் மீது பெரிய மண் சரிந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதால் உள்ளூர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. மருத்துவமனை அதிகாரிகள் 9 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தினர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
மற்றொரு சம்பவத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஷிஷ்பர் பனிப்பாறையிலிருந்து பனிப்பாறை ஏரி வெடித்ததால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், பாகிஸ்தானை சீனாவுடன் இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது. வெள்ளத்தால் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹசனாபாத் நுல்லாவில் ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளம் இது என்று கூறப்படுகிறது. அலியாபாத் அருகிலுள்ள கிராமங்களுக்கான பாசனம் மற்றும் குடிநீர் கால்வாய்களைச் சேதப்படுத்தியது. ஹன்சாவின் பெரும்பாலான மக்களுக்கான பிரதான சாலை இணைப்பைத் துண்டித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.