வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்
தேர்தல் ஆணையத்தின் மீது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு...
தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர்கள் குறித்த பல்வேறு தரவுகளையும் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து பிகாரில் பாஜக தலைவர்களும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் அவர்களுக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையமே வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குஜராத் மக்கள், பிகார் மாநில வாக்காளர்களாக மாறி வருகின்றனர். பாஜகவின் பொறுப்பாளரான பிகுபாய் தல்சானியா பாட்னாவின் வாக்காளராக மாறிவிட்டார். அவர் 2024 ஆம் ஆண்டு குஜராத்தில் வாக்களித்தார். அதன்பின்னர் அவர் பெயர் நீக்கப்பட்டு தற்போது பாட்னாவில் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளார். 5 ஆண்டுகள்கூட ஆகவில்லை, அவர் பிகார் தேர்தலிலும் வாக்களிக்க உள்ளார். பிகார் தேர்தல் முடிந்தபிறகு அவர் பெயர் அங்கு நீக்கப்பட்ட பிறகு மீண்டும் எங்கு செல்வார்? இந்த சதித்திட்டத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்துகொண்டு பாஜக மிகப்பெரிய நேர்மையற்ற செயல்களைச் செய்கிறது.
பிகாரில் வாக்குத் திருட்டு நடக்கிறது. பாஜகவுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் இந்த சதித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது மிகத் தீவிரமான பிரச்னை" என்று பேசியுள்ளார்.
Vote chori row: Tejashwi Yadav says EC helping BJP leaders with 2 voter cards in poll-bound Bihar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.