வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொன்ன நிலையில், தான் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார்.
அப்போது, உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியல் குறித்து யாருமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்த நிலையில், தான் கொடுத்த பிரமாணப் பத்திரத்துக்கான உறுதிப்படுத்தும் ரசீதையும், பிரமாணப் பத்திரத்தின் நகலையும் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பிரமாணப் பத்திரத்தை தான் பெறவில்லை என்று கூறியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், அதற்கான ஆதாரங்களைப் பாருங்கள். இந்த முறை, எங்களுக்கு அனுப்பிய டிஜிட்டல் ரசீது உண்மையானதுதான் என்பதை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையமும், டிஜிட்டல் இந்தியாவும் சந்தேகத்துக்கு இடமளித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வாக்குத் திருட்டுப் புகார் அளிப்பவர்கள், அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கோரியிருந்த நிலையிலும் யாரும் தாக்கல் செய்யவில்லை என்று ஞானேஷ்குமார் கூறியிருந்த நிலையில், அது உண்மையில்லை என்று அகிலேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிரமாணப் பத்திரம் கிடைக்கப் பெற்றதற்காக மின்னஞ்சலில் ரசீதையும் வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக 18 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர்கள் பதிலளித்திருந்தனர்.
அப்போது, வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது பெண்களின் தனியுரிமையை பாதிக்கும் என்றும், அதனை வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருந்த நிலையில், அகிலேஷ் யாதவ், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.