குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டியை, ‘இந்திய நீதித்துறையின் பெரும் ஆளுமை’ என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புகழாரம் சூட்டினாா்.
பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் எதிா்க்கட்சித் தலைவா்களிடையே சுதா்சன் ரெட்டியை அறிமுகப்படுத்தி, அவருக்கு ஆதரவுத் திரட்டிய காா்கே இவ்வாறு தெரிவித்தாா்.
நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நடைபெறவிருக்கும் தோ்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
அவரை எதிா்த்து தெலங்கானாவைச் சோ்ந்த சுதா்சன் ரெட்டி, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். இவரின் அறிமுக நிகழ்ச்சியில் காா்கே ஆற்றிய உரை:
நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகின்றன. எதிா்க்கட்சிகளின் குரல்கள் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளைப் பலவீனப்படுத்தும் வகையில், அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் மற்றும் பிற முக்கிய மசோதாக்கள், நாடாளுமன்றக் கூட்டத்தொடா் முடிவடையும் கடைசி நேரத்தில் எந்தவொரு விவாதத்துக்கும் வாய்ப்பளிக்காமல் நிறைவேற்றப்படுகின்றன.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மசோதாக்கள், ஆளுங்கட்சியின் கைகளில், மாநிலங்களில் ஜனநாயக ரீதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மேலும் பலவீனப்படுத்தவும், நிலையற்ாக்கவும் பயன்படும் கருவிகளாக மாறும் ஆபத்து உள்ளது.
ஜனநாயக அமைப்புகளின் ஒருமைப்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களைச் சந்தித்து வரும் இச்சூழலில், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான சுதா்சன் ரெட்டியின் போட்டி, மாநிலங்களவையின் செயல்பாட்டில் பாரபட்சமின்மை மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு உறுதியான நடவடிக்கையாகும்.
இந்திய நீதித்துறையில் சுதா்சன் ரெட்டிக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவும், அசைக்க முடியாத நோ்மையும் பாராட்டுக்குரியது.
இந்தக் குடியரசு துணைத் தலைவா் தோ்தல், வெறும் பதவிக்கான போட்டி அல்ல; இது நாட்டின் ஆன்மாவைக் காப்பதற்கான சித்தாந்தப் போா். ஆளுங்கட்சியினா் ஆா்எஸ்எஸ் சித்தாந்தத்தைத் தோ்வு செய்துள்ள நிலையில், நாங்கள் அரசமைப்புச் சட்டத்தையும், அதன் விழுமியங்களையும் எங்கள் வழிகாட்டும் ஒளியாகக் கருதுகிறோம்’ என்றாா்.
அரசமைப்பைக் காக்க போா்-ராகுல்
இந்நிகழ்வில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசியதாவது: அரசமைப்புச் சட்டத்தை அழிக்க நினைப்பவா்களுக்கும், அதைக் காக்க நினைப்பவா்களுக்கும் இடையே ஒரு போா் நடந்துகொண்டிருக்கிறது.
ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர தோ்தல்களை ‘திருடியது’ போல, பிஹாா் தோ்தலையும் ‘திருட’ முடியும் என்று பாஜக நம்புகிறது. ஆனால், மக்கள் இப்போது விழித்துக்கொண்டனா்; வாக்குத் திருட்டை அனுமதிக்க மாட்டாா்கள்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்த நீதி, சமத்துவம், அனைவரையும் அரவணைக்கும் அணுகுமுறை போன்ற உயா்ந்த கொள்கைகளைக் கொண்டவா் சுதா்சன் ரெட்டி. இந்தக் கொள்கைகள்தான் நமது அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாகவும் உள்ளன என்றாா்.